RH negative Mother. Dr M.J.M. Suaib இன் 06/08/2018 நாட்குறிப்பேட்டில் இருந்து…

3 வயதுக் குழந்தையின் தாய்க்கு 28 வயது. அவள் தனது இரண்டாம் பிள்ளையைப் பெற்றெடுக்கிறாள். சாதாரண பிரசவம் போலன்றி மிகப்பெரும் ஏற்பாடுகளோடும் neonatologist எனும் ஒரு மாதத்திற்குட்பட்ட குழந்தைகளுக்கென்றேயுள்ள விஷேட வைத்திய நிபுணரும் காத்திருக்க சத்திர சிகிச்சை மூலம் குழந்தை வெளியே எடுக்கப்படுகிறது. எதிர் பார்த்தது போல குழந்தை பெரிதாகவும் மஞ்சள் நிறமாகவுமிருந்தது. உடன் தொப்புள்கொடியிலிருந்து இரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு இரத்தம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகளுக்காக பரிசோதனைக் கூடத்திற்கும் இரத்த வங்கிக்கும் அனுப்பப்பட்டது. குழந்தையின் விஷேட கவனிப்புக்காக காத்திருந்த அந்த விஷேட வைத்தியரிடம் குழந்தை கொடுக்கப்பட்டது.

இவ்வளவு அழுத்தங்களோடு இக்குழந்தையைப் பெற்ற போதும், அவளது முதல் குழந்தை இலகுவாக சாதாரண முறையில் பிறந்தது, மறுநாள் குழந்தையோடு வீட்டுக்கும் சென்று விட்டாள் தாய்.

தாயும் சேயுமாக இருந்தாலும் வாயும் வயிறும் வேறு என்பது போல இங்கு இரத்த வகை வேறு என்பதால் உருவான விளைவு!

A, B, AB, O எனப் பிரதான நான்கு வகைக் குருதிக் கூட்டங்களுண்டு. அவ் எல்லா வகையிலும் positive, negative என இரு வகைகளுண்டு. உதாரணமாக A-positive, A-negative.
இத் தாயின் குழந்தைக்கு இப் பிரச்சினைகள் ஏற்படக் காரணமானது இந்த positive, negative எனும் இருவகைக் குருதிகள் இருவரில் இருந்ததே!

தாயின் குருதி negative வகையாக இருக்கையில் வயிற்றில் வளரும் குழந்தையின் குருதி positive ஆக இருந்தால், மிகப் பொதுவாக இரண்டாம் குழந்தை முதல் இப்பிரச்சினைகள் ஏற்படச் சாத்தியமுண்டு.

positive வகைக் குருதியின் செங்குருதிக் கலங்களில் rh எனும் புரதம் காணப்படும் வேளை negative வகைச் செங்குருதிக் கலங்கலில் அது காணப்படுவதில்லை.
முதல் கர்ப்பத்தின் போதோ அல்லது முதல் பிரசவத்தின் போதோ குழந்தையின் positive வகைக் குருதியின் சொற்ப அளவு தாயின் negative குருதிக்குள் சென்று விட்டால்….

குழந்தையின் positive குருதிச் செங்கலத்திலுள்ள அந்த rh எனும் புரதத்தை தாயினுடம்பு தனக்கில்லாத பிறபொருளாகக் கருதி அதனை அழித்து விட பிறபொருளெதிரிப் புரதங்களை உருவாக்கித் தாயின் குருதிக்குள் வந்த குழந்தையின் குருதிக் கலங்களை அழித்து விட்டு, அவை தாயின் குருதிக்குள் சுற்றிக் கொண்டிருக்கும். தாய் மறுபடி கர்ப்பமாகும் வரை எந்தப் பிரச்சினையும் ஏற்படுவதில்லை.

தாய் இரண்டாம் முறை கர்ப்பமாகும் போது அக் குழந்தையின் குருதியும் positive வகையெனில் அங்கு தான் குழந்தைக்கு பிரச்சினை ஆரம்பிக்கிறது!
ஏற்கனவே தாயின் குருதியிலுள்ள positive வகைக் குருதிக்கு எதிராகத் தோற்றுவிக்கப்பட்ட அப்பிரபொருளெதிரி தாயின் குருதியிலிருந்து குழந்தையின் குருதிக்கு இலகுவில் போய், குழந்தையின் செங்குருதிக் கலங்களை அழிக்கத்துவங்கும். எனவே குருதியில் ஹீமோகுளோபின் அளவு குறைவதால் இன்னும் பல சிக்கல்கள் ஏற்பட்டு குழந்தையின் உடல் வீங்கத் துவங்கும்.
அழிக்கப்படுகின்ற செங்குருதிக் கலங்களின் ஹீமோகுளோபின் மாற்றங்களுக்குட்பட்டு மஞ்சள் நிற பிலிருபின் (bilirubin) ஆக மாற்றப்படும். அவை உடலில் படிவதால் உடல் மஞ்சள் நிறமாக மாறும்.

 

ஆரம்ப காலங்களில் இந்நிலை மூலம் குழந்தைகள் பெரும்பாலும் இறந்தே பிறந்தன அல்லது பிறந்து இறந்து விடுகின்றன. ஆனால் 1940 இன் பின் மருத்துவ ஆராய்ச்சிகளினூடே இதற்குப் பரிகாரம் கண்டு பிடிக்கப்பட்டது. அதாவது தாயின் உடலில் positive குருதிக்கெதிராகத் தோற்றுவிக்கப்படும் அதே பிறபொருளெதிரிகளைத் தயாரித்து, positive குருதியுள்ள குழந்தையைத் தாங்கிய negative குருதியுள்ள தாய்க்கு அவசியமென ஊகிக்கப்படுகையில் ஊசி மூலம் ஏற்றி தாயின் உடலில் பிறபொருளெதிரி உருவாகுவது தடுக்கப்படுவதோடு, தாயின் உடலுக்குள் குழந்தையின் positive குருதிக் கலங்கள் புகுந்திருப்பின் அவற்றையும் அவை அழித்து விடும்.

பொதுவாக இரண்டாம் குழந்தை முதலே இப் பாதிப்பு ஏற்படும். ஏனெனில் தாயில் பிறபொருளெதிரி உண்டாகி முதல் குழந்தையைப் பாதிக்க முன்னரே அக்குழந்தை பிறந்து விடுகிறது.

கருத்தரித்த பின் உரிய முறையில் பிணியாய்வு நிலையங்களுக்குச் செல்வதன் மூலம் தாயின் குருதி வகை அறியப்பட்டு அதற்கேற்ப சிகிச்சை வழங்கப்பட்டால் இவ் ஆபத்துக்களிலிருந்து குழந்தைச் செல்வங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

தாயின் குருதி negative ஆகவும் தந்தையின் குருதி positive ஆகவுமிருப்பின் கூடிய கவனம் தேவை. எல்லா positive குருதித் தந்தைகளுக்கும் positive குருதியுடைய குழந்தைகள் வருவதில்லையென்பதால் குறிப்பிட்ட அளவினரே இதனால் பாதிக்கப்படுவது ஓரளவு மகிழ்ச்சியானதே.

negative குருதிப் பெண்களுக்கு negative குருதி ஆண்களே பொருத்தமாயினும், positive குருதி ஆண்களை ஒதுக்கி விட வேண்டாம், உரிய முறையில் கிளினிக்குக்குப் போனால் அச்சங் கொள்ள வேண்டி வராது. Positive குருதிப் பெண்களுக்கு இதைப் பற்றிய கவலை தேவையே இல்லை.

எனவே ஊசி போடக் கூடாது, கர்ப்பிணிகள் கிளினிக் போகத் தேவையில்லை, வீட்டிலேயே பிரசவம் பார்த்துக் கொள்ளலாம் என்று உலருபவர்களுக்கு இது சமர்ப்பணமாகட்டும்.

இது கீழே 2 நிமிட Animation ஆக விளக்கப்பட்டுள்ளது.

 

உறுதிப்படுத்தப்பட்ட சுகாதார தகவல்களுக்கு எமது பக்கத்தை Like செய்து இணைந்திருங்கள்.
https://www.facebook.com/LankaHealthTamilPage/

COVID-19 பற்றிய உறுதிப்படுத்தப்பட்ட தமிழ்மொழிமூலமான செய்திகளுக்கு இதனை Click செய்க.

7,471 total views, 3 views today